
“நீங்கள், உங்கள் குழந்தைகளை எல்லாவற்றையும்விட அன்பு செய்யுங்கள், என்று சொல்லுகிறீர்கள்; ஆனால், எங்கள் முன்பாகவே, எங்களின் எதிர்காலத்தையே, சூறையாடுகிறீர்களே! இது எந்த விதத்தில் நியாயம்?”
- கிரேட்டா தூர்ன்பெர்க்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ஆம் நாளன்று நமது நாட்டில் ‘தேசியக் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டில் இந்தக் குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தில், நாம் அவர்கள் மீது கொண்டுள்ள அன்பு, அரவணைப்பு, மதிப்பு, மரியாதை மற்றும் எதிர்காலம் குறித்த அக்கறை உண்மையானது தானா? என்பதை குறித்து சுயவிமர்சனப்படுத்தி பார்க்க வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.
கடந்த மாதம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான இரண்டு வயது குழந்தை சுஜித் வில்சனை கொண்டு நடத்தப்பட்ட அரசியல், குழந்தைகளுக்குரித்தான வாழ்வுரிமையையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. நமக்கும் வேடிக்கை பார்ப்பதே, வாடிக்கையாகிவிட்டது. இத்தகையச் சூழலில் ஏதோவொரு குழந்தையின் ‘ஏக்கக் குரல்’ ‘புரட்சிக்குரலாக’ மாறி ‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை’ என இயக்கமாக மாறியிருக்கிறது.
“இம் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு நற்செய்தியைக் கொண்டு வருகிறது. அது என்னவென்றால் இன்னும் கடவுள் மனிதர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளார் என்பதுவே,” என்பார் கவிஞர் இரவீந்தரநாத் தாகூர். இந்த உலகின் ஏதோவொரு மூலையில் ‘மாற்றத்திற்கான குரல்’, நம்பிக்கைக்கான குரல் ஒலிக்கும்போது நமக்கும் நம்பிக்கை பிறக்கிறது. விழிப்புணர்வு கிடைக்கிறது.
பதினாறு வயதே நிரம்பிய கிரேட்டா தூர்ன்பெர்க்கின் எதிர்கால வாழ்வு குறித்த பயம், கவலை எல்லாக் குழந்தைகளிலும் இருக்கிறது. நிகழ்காலத்தவர் மீது அவர் கொண்டுள்ள கோபம், நமது குழந்தைகள் மத்தியிலும் அனலாக வெளிப்படுகின்றது. நாம் வாழும் இந்தப் புவி நமக்கானதல்ல என்று உணர்ந்த மூத்தோர்களால் தான் இன்றும் நாம் வாழமுடிகிறது அந்த நம்பிக்கையை அடுத்த தலைமுறையினர்க்கு கொடுக்க வேண்டிய கடப்பாடு நமக்கும் உண்டு, என்பதை ஒரு ‘கடுகு விதை’ போல் இருந்து நமக்கு கேள்விக்கனைகளைத் தொடுக்கிறார்கள் இன்றையக் குழந்தைகள். நாமோ! பதிலளிக்க தவறுகிறோம், தடுமாறுகிறோம்.
என் இந்தத் தயக்கம்? பொருளாதார வளர்ச்சியில் அக்கறை காட்டும் நமது நாடு, சமூக முன்னேற்றத்தில் சுயநலம் மிகுந்த நாடாக பின்னோக்கியே செல்கிறது. உதாரணமாக, காஷ்மீரில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட
வன்முறை சிறைவாசம், வாழும் தலைமுறையினர் மீது வெறுப்புணர்வை வளர்த்துள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மீது நடத்தப்பெறும் பாலியல் வன்கொடுமைகள், புதிய தேசியக் கல்விக் கொள்கை குழந்தைகளை
கல்வியின் மீதுள்ள ஆர்வத்தை, முதியவர்கள் மீதான மரியாதையைக் குறைத்துவிட்டது. உறவுகளை இழந்து சமூக வலைத்தளங்களில் வாழ்வை தொலைத்த பிஞ்சு உள்ளங்கள் நிலைத்தடுமாறுகின்றனர்.
‘எனது எதிர்காலத்தை சூறையாடுவதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என்று கிரேட்டா தூர்ன்பெர்கைப் போல நமது குடும்பங்களிலும் கோபக்கனலோடு கேள்வி கேட்கத் தயாராகி விட்டவர்கள் நம் குழந்தைகள். என்ன பதிலளிக்கப் போகிறோம்?
”குழந்தை,
அன்பின் கொடை
அன்பில்லையேல் அறம் இல்லை:
அறமில்லையேல் வாழ்வு இல்லை:
வாழ்வில்லையேல் மனிதன் இல்லை”.
அடுத்தத் தலைமுறையினரும் வாழும் இல்லமாக இப்புவி மாறிட, நம் குழந்தைகளோடு நாமும் கரம் சேர்ப்போம், தோள் கொடுப்போம். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்திட துணிந்திடுவோம், இயக்கமாகிடுவோம்.
இயேசுவின் தோழமையில்,
அருட்பணி. பால் பிரிட்டோ