“எங்கெல்லாம் மருத்துவக்கலை நேசிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் மனித நேயம் நிலைத்திருக்கிறது” - ஹிப்போகிரட்டஸ்.
ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதம் முதல் நாளினை இந்தியர்கள் மருத்துவ தினமாக கொண்டாடுகிறார்கள். 1882 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் தேதி அன்று பிறந்து 1962ம் ஆண்டு தனது 80ம் வயதில் அதே நாளில் உயிர்நீத்த மேற்கு வங்கத்தைச் சார்ந்த மருத்துவர் பிதான் சந்திர ராய் அவர்களின் நினைவாக மருத்துவ தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மருத்துவக் கலையை வெறுமனே தொழிலாகக் கருதாமல் சமூக சேவையாகக் கருதி செயல்பட்டதனால் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதினை பெற்றவர் பி.சி.ராய் அவர்கள். மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வராக இருந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக சமூகப்பணி ஆற்றியவர்.
”உங்களத்தான் கடவுளா நம்பியிருக்கிறேன் எப்படியாவது என் பிள்ளையை காப்பாத்துங்க!”
இந்த ஏக்கம் நிறைந்த குரலொளி ஒவ்வொரு மருத்துவமனையிலும் எந்நாளும் எதிரொலித்துக் கொண்டேதான் இருக்கின்றது.’மருந்தே உலகம்’ என்று வாழ்ந்து வருகின்ற நோயுற்ற சமூகத்தில் பலகோடி பேருக்கு தரமான சிகிச்சை என்பது எளிதான காரியமல்ல. இன்று கிராமங்களில் 90 வயது நிரம்பிய வயது முதிர்ந்தவர்களை காண்பது அரிது. 2011-2015 ஆய்வு இந்தியாவின் மனிதனின் சராசரி ஆயுட்காலம் பெண்களுக்கு 63 வயதாகவும் ஆண்களுக்கு 69 வயதாகவும் குறிப்பிடுகிறது காரணம் இன்னும் தரமான மருத்துவ சிகிச்சை என்பது பலருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.
இந்தியாவில் மருத்துவத் துறையில் அதிகமான வருமானம் பெறும் மாநிலங்களில் கர்நாடகம் 2வது இடம் வகிக்கின்றது. அதே மாநிலத்தில் வெறும் 5 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கின்ற மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதும் எதார்த்தமான உண்மை. அவரைத்தான் இந்த மாத அட்டை படத்தில் காண்கிறோம்.
மருத்துவர் சங்கர கௌடா. கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அருகில் இருக்கின்ற ஒரு சிறிய குக்கிராமத்தில் வசிக்கின்றார். இவர் ஒவ்வொரு நாளும் தோல்வியாதியால் பாதிக்கப்படுகின்ற நோயாளிகளுக்கு ஏறக்குறைய 150 பேருக்கு சிகிச்சை அளிக்கின்றார். தொழில் ரீதியாக 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். நகரத்தில் வாழ்ந்தால் மருத்துவக்கலை வெறுமனே தொழில் ஆகிவிடும் என்பதால் என்னவோ இவர் கிராமத்திலேயே வசித்து வருகின்றார்.தினமும் பேருந்தில் பயணம் செய்து மாண்டியாவில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். மருத்துவத் தினத்தன்று மருத்துவக் கலையை மனிதநேய சேவையாக எண்ணி பணிபுரிந்து வரும் சங்கர கௌடாவுக்கு நமது வாழ்த்துக்கள். இதே போன்று மருத்துவ சேவை செய்யும் அனைத்து மருத்துவர்களையும் மனதார வாழ்த்தி நன்றி கூறி மகிழ்கிறோம்.
உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று” (மாற்கு 5:34)என்கிறார் இயேசு. இந்த நம்பிக்கையோடு மனித நேயம் இணைகின்ற போதுதான் நலம்பெறுவது எளிதாகிறது. ஆதலால் தான் நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 13ந்தேதி தனது மறையுரையில் ”இயேசுவே நல்ல மருத்துவர் காரணம் கடவுளின் இரக்க முகம்” என்று நமக்கு தெளிவுபடுத்துகிறார்.
”மருந்துகள் எப்பொழுதும் தேவையல்ல்குணம் பெறுவோம் என்ற நம்பிக்கையே எப்போதும் தேவையானது.” -நார்மன் கஷின்ஸ்
இயேசுவின் தோழமையில்
அருட்பணி. பால்பிரிட்டோ
ஆசிரியர்

Spiritual Category
Religious Category