தொலைவில் இருப்பவர்களை அன்புசெய்வது எளிது; ஆனால் அருகில் இருப்பவர்களை கண்டு கொள்வது கடினம்.பட்டினியில் இருப்போர்க்கு ஒரு குவளை அரிசி கொடுப்பது எளிது; ஆனால் குடும்பத்தில் அன்பிற்காக ஏங்குகிறவர்களின் தனிமையையும் துன்பத்தையும் போக்குவது கடினம். எனவே, குடும்பங்களில் அன்பை கொண்டு வாருங்கள். ஏனென்றால், அங்குதான் ஒருவரை ஒருவர் அன்பு செய்வதே துவங்குகிறது. -அன்னை தெரசா
கடந்த மாதம் 24ந் தேதி இத்தாலி நாட்டில் அதிகாலையில் 3.30 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறக்குறைய 300 பேர் உயிர் இழந்துள்ளனர்.இந்த சோகமான சூழலுக்கு மத்தியில், ஓராண்டாக தங்களது திருமண நிகழ்விற்காக தயாரித்திருந்த ராமோன் மற்றும் மார்டினா அடாஸி தங்களது திருமண நிகழ்வினை 28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கொண்டாடினர்.
இந்த சோகத்திற்கு மத்தியில் ஏன் இத்தகைய கொண்டாட்டம்? என்று கேட்டபொழுது, அவர்கள் சொன்ன பதில் : எங்களது கிராமத்தினையும் கிராமத்து மக்களையும் நாங்கள் அதிகமாக நேசிக்கிறோம். எனவே, இந்த சோகத்தின் மத்தியில் மக்களுக்கு நம்பிக்கை தருவதற்காகவே இந்த திருமண நிகழ்வினை நாங்கள் நடத்த விரும்பினோம்.”
அன்பின் அடித்தளம் குடும்பம்’ என்பதற்கு இது ஓர் அடையாளம்.
அன்பு என்றால் அன்னை தெரசா என்று சொல்வது இந்தியாவில் வழக்கமாகிவிட்டது. இந்தியாவில் கிறிஸ்தவத்தின் அடையாளம் அன்னை தெரசா என்பதை யாரும் மறுக்கமுடியாது.அன்னை தெரசாவின் வார்த்தைகள். ஒவ்வொரு குடும்பங்களிலும் உணரப்படுகின்றபொழுது குடும்பம் புனிதம் பெறுகிறது.
கடந்த 4-ந் தேதி புனித நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள புனித அன்னை தெரசா நமது காலத்தில் வாழ்ந்தவர். அவள் வாழ்ந்து காட்டிய அளவுகடந்த அன்பு, நமது குடும்பங்களில் செயலாக்கம் பெறுகின்ற பொழுது நாம் அவளது பாதுகாவலை பெறுவது உறுதி.
நீ இந்த உலகை மாற்ற விரும்பினாய் என்றால் முதலில் உன் இல்லத்திற்கு போய் உன் குடும்பத்தை அன்பு செய்.’’
- புனித அன்னை தெரசா
புனித அன்னை தெரசாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுவின் தோழமையில்
அருட்பணி. பால்பிரிட்டோ
ஆசிரியர்

Spiritual Category
Religious Category