அடியேன் 2000-ம் ஆண்டில் இயேசுவின் மீட்புப் பணியில் பங்குபெற்ற இஸ்ராயேல் நாட்டிலுள்ள புனித இடங்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். இயேசுவின் வாழ்வில் பங்குபெற்ற பரிசுத்த இடங்கள் என்னையும் பரிசுத்தப்படுத்தியது.
இயேசு சிலுவையில் மரித்த கல்வாரிமலையில் இப்பொழுது பெரிய திருச்சிலுவை ஆலயம் இருக்கிறது. 2000-ம் ஆண்டுகளாய் பல்வேறு தாக்குதல்களுக்கும், ஆக்கிரமிப்புக்கும் அழிவுக்கும் உள்ளான இப்புனித இடத்தில் இன்று இத்திருச்சிலுவை ஆலயம் புனிதம் வெளிப்படுத்தும் ஆலயமாய் திகழ்கிறது.
ஆலயத்தினுள் திருச்சிலுவை வைக்கப்பட்ட இடம் மிகப் புனிதமாய் காக்கப்பட்டு வருகிறது. அங்கு மண்டியிட்டு அநேகர் தங்கள் பாவக் குற்றங்களை நினைத்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்கள். நானும் மண்டியிட்டபோது மனதுருக்கம் எனக்குள்ளும் இறங்கியது. கடந்த கால குற்ற உணர்வுகள் என்னையும் ஆட்கொண்டது. கண்ணீர் வடித்தேன். ஜெபத்திற்குப் பின் எழுந்தபோது இயேசுவின் கொடிய பாடுகள் நிறைந்த சிலுவை மரண அகோர காட்சி என்னுள் நிலைகொண்டது. அதற்குப் பிந்திய வருடங்களிலும் இந்தநினைவுகளே என்னைப் புனித பாதையிலும் வழிநடத்தி வந்ததை உணருகிறேன்.
விவிலியத்தில் புனித பவுல் தீத்துவுக்கு இவ்வாறு எழுதுகிறார்.”இயேசு நம்மை எல்லா அக்கிரமத்திலிருந்தும் மீட்கவும் நம்மைத் தூயவர்களாக்கி நற்செயல்களில் ஆர்வமுள்ள ஓரினமாகத் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவும் தம்மை நமக்காகக் கையளித்தார்”. (தீத்து 2:14)
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரண போராட்டத்தில் இருக்கும் பொழுதும் சாந்த சொரூபியாகவே காட்சியளிக்கிறார். அவரின் வலப்பக்கம் ஒருவனும் இடப்பக்கம் ஒருவனுமாக இரு கள்வர்களையும் மரண தண்டனைக்கு உட்படுத்தி சிலுவை மரத்தில் உயிர்விட அறைந்தார்கள். இயேசு இரு கள்வர்களுடன் கல்வாரி மலையில் சிலுவையில் அறைந்து உயர்த்தப்பட்டது எதற்கெனில் மனிதர்கள் இயேசுவை கள்வர்களில் ஒருவராகக் கருதி அவரை காரி உமிழ வேண்டும் என்பதற்காகவே.இயேசு இப்பழியையும் அவமானத்தையும் ஏற்று சிலுவையில் அறையப்பட தம்மையே ஒப்புக்கொடுத்தார்.
சிலுவைச் சாவுக்குத் தண்டிக்கப்பட்டவர்கள் அவர்களாகவே சிலுவை மரத்தைத் தூக்கிக் செல்லும் கொடுமையை அனுபவிக்க வேண்டும். சிலுவை மரணம் ஒரு மலையின் உச்சியில்தான் இருக்கும். ஏனெனில் எல்லா மக்களும் பார்த்து அவர்களைச் சபிக்க வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு செய்வார்கள். இயேசு குற்றமற்றவர் என மும்முறை பிலாத்துவினால் அறிக்கையிடப்பட்டாலும் கயவர்களால் உட்படுத்தப்பட்ட சிலுவைச்சாவை நம்மை மீட்பதற்காக ஏற்றுக்கொண்டார்.
சிலுவையின் பாதை ஒரு கொடிய வேதனை தரும் பயணம். குற்றவாளிகளின் மனம் மரணபயத்திலும், கலக்கத்திலும் மூன்று ஆணிகளில் சிலுவையில் தொங்கும் அகோர வேதனையும் அவர்களை ஆட்கொள்ளும். மேலும் சிலுவைப்பாதையின் போது பாரச்சிலுவையின் பளுவில் தள்ளாடினால் காவலர்களின் சவுக்கடிகள் கொடூரமாய் அவர்கள் மீது விழும். அவர்களைச் சூழ்ந்துசெல்பவர்களின் பழிச் சொற்களும், ஏளனப்பேச்சுக்களும் கேலிபண்ணி பரிகாசம் செய்தாலும் அம்மரணப் பாதையில் வேதனையாய் இருக்கும். இயேசு நீதிமானாய் இருப்பினும் நம் மீட்புக்காக இக்கொடிய பாடுகளை அனுபவிக்க தம்மையே ஒப்புக்கொடுத்தார். எத்துணை மேலான அன்பு நமக்காக.
விவிலியத்தில் லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே இயேசுவுடன்
அறையப்பட்ட இருகள்வர்களைக் குறித்து எழுதுகிறார். (லூக்கா 23:39-43)
நல்ல கள்ளனாகிய தீஸ்மாஸ் சிலுவையில் மரண வேதனையில் இருக்கும் பொழுதும் அகோரமாய் காட்சியளிக்கும் இயேசுவிடம் விசுவாச அறிக்கை செய்கிறார். தன்பாவத்தை உணரவும். மன்னிப்புக் கேட்கவும், குற்றங்களை ஏற்று மனம் வருந்தவும் செய்கிறான். நல்ல கள்வனின் வார்த்தைகள் நம் இதயத்தில் பதியும் வார்த்தைகளாகவே இருக்கின்றன.
1. கெட்ட கள்ளனிடம் நாம் தண்டிக்கப்படுவது முறையே. ஏனெனில் நம் செயல்களுக்குத்தக்க பலனைப் பெறுகிறோம்.
2. அகோர காட்சியளிக்கும் இயேசுவை நீர் அரியணையில் வரும்போது என்னை நினைவு கூறும் எனக்கூறி இயேசுவை அவனது மீட்பின் அரசராக ஏற்றுக்கொள்கிறான். விண்ணக பேறு பெறுகிறான்.
3. நித்திய மோட்சவாழ்வை ஏங்கும் மனம் திரும்பும் இதயத்தையும்
வெளிப்படுத்துகிறான். நல்ல கள்வனைப் போன்று இந்த நல்ல இதயத்தின் உள்ளம் நமக்கும் வரட்டும்.
1718 ஆம் நூற்றாண்டின் காலங்கள் பிரான்ஸ் நாட்டின் இருண்ட காலம். நெப்போலிய மன்னரின் கொடுமையின் ஆட்சி திருச்சபையையும் மக்களின் வாழ்வையும் பாதித்து இறைஅருள் இல்லா இருள் வாழ்வுக்கு இட்டுச் சென்றது. இறை வாழ்வை இழந்த மக்கள் நரகப் பாதையில் நடந்து சென்றார்கள். அருள் வாழ்வை இழந்த மக்களை புனித வாழ்வுக்கும், இறை மகிமை வாழ்வுக்கும் இட்டுச் செல்ல இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட புனிதர் தான் புனித ஜான் மரிய வியான்னி (1786-1859), பாலி மறைமாவட்டத்திலுள்ள ஆரஸ் நகரில் 41 ஆண்டுகள் பங்குக் குருவாய் இருந்தார். இயேசுவின் சிலுவைப்பாடுகளைத் தன் வாழ்வு முழுவதும் வாழ்ந்தார். மணிக்கணக்காய் திருப்பீடத்தின் முன் மக்களுக்காய் ஜெபித்து போதித்தார். தபசியாக வாழ்ந்து மக்கள் மனந்திரும்ப கண்ணீருடன் போதித்தார். மக்கள் அவரிடம் பாவ அறிக்கை செய்து மனம் திரும்ப பல நாடுகளிலிருந்தும் வந்தார்கள். அவர் நோய்வாய்ப்பட்டு மரிக்கும் காலத்திலும் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் கூட பாவசங்கர்த்தனம் கேட்டிருக்கிறார். நாமும் பாவ அறிக்கை செய்து மனந்திரும்புவோம். ஆமென்.
அருட்தந்தை. ஜெகநாதன்
பங்குத்தந்தை, அய்யம்பாளையம்
COMMENTS