
காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதியே
அரசே ! பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கு
மதுரை பேராயர், தமிழக ஆயர் பேரவைத் தலைவர் அரசுக்கு வைக்கும் கோரிக்கை
22-05-2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டத்தில் காயம்பட்டோர் பலர், குண்டடிக்கும், துப்பாக்கிச் சூட்டிற்கும் பலியானோர் மேலும் பலர். ஸ்டெர்லைட் உருவாக்கும் கொடிய எதிர் வினைகளை உணர்ந்து தன்னெழுச்சியாக உருவான மக்கள் போராட்டத்தை ஒரு ஜனநாயக உரிமையாக கருதி, அறப் போராட்ட வழியை கையிலெடுத்த அப்பாவி மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இக்கொலை நிகழ்வால் பாதிக்கப்பட்டோரின் இன்றைய நிலை என்ன? இது காவலர்களின் அத்து மீறலால் நிகழ்த்தப்படட கொலையா அல்லது போராட்டக்காரர்களை அடக்குவதற்காகவும், சட்ட ஒழுங்கை காப்பாற்றுகிறோம் என்ற முறையில் காவலர்கள் இத்துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்திட கட்டாயத்திற்குள்ளாயினரா? ஏன்ற கேள்விகள் சமூகத்தின் பல தரப்பினரிடமிருந்தும் எழவே, அரசு விசாரணை கமிஷன் அமைத்தது. இக் கமிஷன் அமைத்து இரண்டு ஆண்டுகள் நெருங்கிவிட்ட நிலையில் குற்றவவாளிகள் யாரென கண்டுப்பிடிக்கப்படவுமில்லை. இரண்டு ஆண்டுகள் உருண்டோடிய பின்பும் இன்னும் உரியோருக்கு நீதியும் வழங்கப் பெறவில்லை. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்பும் மீண்டும் திறக்கப்படுமோ என மக்களிடம் குடிக்கொண்டுள்ள அச்சம் இன்னும் குறையவில்லை, குறைவதற்கான எந்த வித உறுதியான உத்திரவாதத்தையும் அரசு இன்னும் அளிக்காத நிலையில் மக்கள் இன்னும் பதட்டத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். பாதிக்கப்பட்டோர் நலனில் அக்கறை காட்டவேண்டிய அரசு, மக்கள் அமைப்புகள் திரண்டெழுந்து கேள்வி கேட்ட பொழுதெல்லாம் அடக்குமுறையை கையாண்டாதை மக்கள் மறக்கவில்லை.
மாநில அரசே!
• துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்ட குடும்பத்தினர்க்கு உரிய நீதியை வழங்கு!
• ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் விசாரணையை துரிதப்படுத்து!
• ஆணையத்தின் பரிந்துரைகள் நியாயமானதாக அமைய நடவடிக்கை எடு!
• உயிர் நீத்த 13 போராளிகள் நினைவை போற்றும் வகையில் நீதி வழங்க நடவடிக்கை எட.
அரசின் மக்கள் ஆதரவுக்கு தமிழக ஆயர் பேரவை என்றும் துணை நிற்கும்.
மேதகு முனைவர் அந்தோணி பாப்புசாமி
பேராயர், மதுரை உயர் மறைமாவட்டம்
தலைவர் தமிழக ஆயர் பேரவை