
அடியேன் வேதாகமத்தைப் பலமுறை வாசித்திருக்கிறேன். இறைவார்த்தைகளைத் தியானித்து ஜெபித்திருக்கிறேன். இயேசுவின் அருள் மொழிகள் என் இருண்ட வாழ்வில் ஒளியாய் விளங்கி என்னை வழிநடத்தியதை ஆணித்தரமாய் உணருகிறேன்.
ஆனால் யோபு ஆகமம் மட்டுமே எனக்கு புரியாத புதிராகவே இருந்திருக்கிறது. யோபுவின் இருதயப்பூர்வமான புலம்பல்களும் பதில் மொழிகளும் வேதனையின் வெளிப்பாடுகளும் எனக்கு விளங்காத கருத்துக்களாகவே இருந்திருக்கிறது.
ஏனெனில் யோபுவின் வேதனை இழப்பு இழந்தநிலையின் அனுபவங்கள் எனக்கு இல்லை. எனவே யோபுவின் சொற்களும் இதயப்பூர்வமான குமுறல்களும் என் இதயத்தில் ஆழமாய் பதியவில்லை.
ஆனால் தற்சமயத்தில் என் உடலில் ஏற்பட்ட திடீர் சுகவீனம் செயலற்ற அவயவ பாதிப்பு யோபுவின் மனநிலைக்கும் அனுபவ உணர்வுக்கும் வேதனையின் வெளிப்பாடுகளுக்கும் என்னைக் கொண்டு சென்றது. யோபுவின் ஆகமம் என் வாழ்வில் புத்தொளியைப் பரப்பியது. யோபுவின் வெளிப்பாடுகள் எனக்கு அதிசயக் கருவூலங்களாய் தென்பட ஆரம்பித்தது.
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி ஞாயிறறுக்கிழமை காலை 9 மணி. ஞாயிறு திருப்பலியை மக்களுக்காக நிறைவேற்றிக் கொண்டிருந்தேன். திடீரென உடம்பின் அவயங்களில் சில பாதிப்பை உணர்ந்தேன். இடது கண் தானாக மூடிக்கொண்டது. திறக்க முடியவில்லை. பேச்சு நின்று போய்விட்டதால் என்னால் செயல்பட முடியவில்லை. மக்கள் அதிர்ச்சியில் கண்ணீர் வடித்தார்கள். உடலின் ஒரு பகுதியில் பக்கவாதம் ஏற்பட்டது. சிரமத்துடன் திருப்பலி முடித்தேன். படுக்கையில் படுத்தேன். சிறு வைத்தியங்கள் பலனற்று போய்விட்டது.
அடுத்த நாள் ஏப்ரல் 2526ல் சென்னை மாதாத் தொலைக்காட்சிக்காக 15 நாட்களுக்கு தியான உரைகள் கொடுக்க கேட்டிருந்தார்கள் ஒத்துக் கொண்டேன். இந்நிலையில் நான் எப்படிப் பேசுவது எனக்குழம்பிய நிலையில் சென்றேன்.
ஒலி ஒளிப்பதிவுக் கூடத்தில் 3 மணி நேரம் முயற்சித்தும் 10 நிமிடமே பேச முடிந்தது. ஒலிப்பதிவில் இருந்தவர்கள் என்னைத் தேற்றினார்கள். நானோ மனம் நொந்த நிலையில் ஆலயத்திற்குள் (பிரகாச மாதா ஆலயம்) சென்று மாதா வின் முன் கண்ணீருடன் ஜெபித்தேன்.மாதாவின் அருளால் அடுத்த நாளில் தேவ செய்திகள் நிறைவாய் பதிவு செய்யப்பட்டது.
யோபு தொழுநோயின் வேதனையில் பிள்ளைகளும் சொத்துக்களும் பறிபோன நிலையில் தனிமையில் தவித்ததை என்னால் உணர முடிந்தது.(முதல் மூன்று அதிகாரம்)
சிரமத்துடன் வீடு வந்து சேர்ந்தேன். உடனே வத்தலக்குண்டு லெயோனார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தீவிர சிகிச்சைப் பிரிவில் என்னை கவனித்தார்கள். ஆனால் அவர்களாலே புரிந்து கொள்ள முடியாதவாறு என் உணவுக்குழல் சுருங்க ஆரம்பித்தது கடைசியில் இறுகிக் கொண்டது. ஒரு துளி தண்ணீரோ ஒரு பருக்கை அரிசி சாதமோ விழுங்குவதற்கு சிpரமப்பட்டேன். இப்படி மூன்று நாட்கள் மரணத்தின் விளிம்பிற்கு போய்விட்டதை போல் உணர்ந்தேன். “பசி” “பசி” என்று கதறுகிறேன் யாராலும் எவ்வுதவியும் செய்ய முடியவில்லை. கடைசியில் மூக்கு வழியாய் செலுத்தப்பட்ட சிறு குழாய் மூலம் ஒரு டம்ளர் பால் ஊற்றியது எனக்குள் உயிர் இருப்பதை உணர வைத்தது.
யோபு தன் ஆகமத்தில் இந்த வேதனையில் இப்படிப் புலம்புகிறார்
தாய் வயிற்றிலிருந்து ஏன் என்னை வெளிவரச் செய்தீர்? யாரும் பாரா முன்பே நான் செத்திருக்கக் கூடாதா? கருப்பையிலிருந்து நேரே சவக்குழிக்கு நான் போயிருந்தால் நலமாயிருந்திருக்கும்; எனக்கும் அவ்வாறு இருந்தது.(யோபு 10: 18-19)
என் வியாதிக்கு ஏற்ற மருத்துவக் கருவிகளும் மருந்துகளும் அம் மருத்துவமனையில் இல்லாததால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டேன். ஆராய்ந்த மருத்துவர்கள் குறிப்பிட்டார்கள் “”ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் உணவுக் குழலைப் பாதிக்கும் வியாதிவரும். உங்களுக்கு வந்திருக்கிறது தலையிலிருந்து கழுத்து வழியாய் வரும் நரம்பில் ஐந்து ஊசி மருந்துகள் செலுத்த வேண்டும். ஒரு ஊசியின் மருந்தே அதிக விலை ஆகும் எனக் கூறித் தயங்கினார்கள். பேராயர் பெருந்தன்மையுடன் “எங்களுக்கு இவர் முக்கியம் பணம் பெரிதல்ல” எனக் கூறிவிட்டார். ஐந்து நாட்கள் ஐந்து ஊசி மருந்துகள் இரவில் போடப்பட்டது. அவ்வ10சி மருந்து இரவு முழுவதும் எனக்கு வேதனைகளை அதிகம் கொடுத்தது. கெத்சேமனியின் நினைவு எனக்கு வந்தது.இயேசுவின் வேதனையில் பங்கு பெற்றேன்.
என்னோடு சுமார் 10பேர் அந்த அறையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தார்கள். உயிருக்குப் போராட்டமான நிலை எனக்கு இரவு பகல் எதுவெனத்தெரியவில்லை. ஐந்து நாட்கள் ஐந்து மாதா சிறு குழந்தையைப் போல அதே படுக்கையில் கிடந்தேன்.எல்லோரும் ஒரு நிமிடத்தில் உடல் செயல்பாடு இழந்தவர்கள்.
மருத்துவர்கள் செவிலியப் பிள்ளைகளும் ஒரு தாய் போல் என்னைப் பராமரித்துக் கொண்டார்கள். மூக்கு வழியாகவே திரவ உணவு சென்று கொண்டிருந்தது. இப்படி 15 நாட்கள்.
யோபு கூறுகிறார் “நோய்வாய்பட்டு படுக்கையில் படும் வேதனையாலும் எலும்புகள் இடைவிடாத ஒடுங்குகின்றன. மனிதன் உணவையே அருவருக்கிறான். சுவையான உணவும் அவன் நாவுக்குக் கசக்கிறது. அவன் எலும்பும் தோலுமாய் மெலிந்து போகிறான் (யோபு 33 :19-21)
தீவிர சிகிச்சையில் என் உடம்பில் மாற்றம் உணர்ந்தேன். தொடர்ந்து மருந்துகளும் ஊசி மருந்துகளும் கொடுக்கப்பட்டது.
வாய் வழியாக உணவும் தண்ணீரும் கொஞ்ச கொஞ்சமாய் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மருந்துகளும் கொடுக்கப்பட்டது. எங்கள் இல்லம் வந்து சேர்ந்தேன்.மருந்தின் தாக்கத்தால் தொடர்ந்து விக்கல் என்னை வேதனைக்கு கொண்டு போனது. சாப்பிடும் சிறிதளவு உணவும் வாந்தியாக வெளியே வந்தது. என் சரீரத்தை 30 ஆண்டுகளாய் அறியும் மருத்துவர் ஒருவர் தீவிர ஆலோசனையில் மருந்து கொடுத்து ஏழுநாட்கள் தொடர்ந்த விக்கலை நிறுத்தினார்.
யோபு மீண்டும் ஆசீர்வாதங்களைப் பெற்றதைப் போல நானும் உணருகிறேன். உயிரும் வாழ்வும் மனிதருக்கு இறைவன் கொடுத்த கொடை இறைஞ்சியவாழ்வை மகிமைக்கும் இறை மக்களுக்கும் பணிசெய்யவே என உள்ளம் ஏங்குகிறது. இறை இயேசு வாழ்த்தப் பெறுவாராக!
அருட்தந்தை.ஜெகநாதன்
பங்குத்தந்தை அய்யம்பாளையம்
COMMENTS