தந்தையே, உமக்கு விருப்பமிருந்தால் Share On
SPIRITUAL CATEGORY ARTICLE |

“இந்தத் தவக்காலம் முழுவதும் தண்ணி அடிக்க மாட்டேன்னு என் மனைவிகிட்ட வாக்குக் கொடுத்திருக்கிறேன். அதைக் கடைப்பிடிக்கிறதில் இருக்கிற கஷ்டம் அவளுக்கு எங்க தெரியப் போகுது?! ஒவ்வொரு நாளும் ஒரு மாதம் போல கண்ணைக் கட்டுது!”

இதைக் கேட்ட நண்பன் சொன்னான்,”ஆண்டவர் பாலைவனத்தில நாற்பது நாள் தான் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, இந்தத் தவக்காலத்தின் மொத்த நாட்களை எண்ணிப்பாத்தா, அதைவிட அதிகமா, 46 நாளா ,ழுத்துக்கிட்டே  போகுதேப்பா!”

உண்மை தான்…யேசுவின் பாடுகளையும் இறப்பையும் நினைவு படுத்துகின்ற இக்காலம் நமது வாழ்வின் சோகத்தை அதிகப்படுத்துவதாக இருக்கலாம். பாதயாத்திரையாக கால் வலிக்க, பாதங்கள் புண்ணாகத் திருத்தலங்களுக்குச் செல்வது, முழங்கால் தேய சுடுமணலில் முட்டி போட்டு நகர்வது, உண்ணா நோன்பினால் வரும் உபாதைகளைத் தாங்கிக் கொள்வது…இதுபோன்றவைகளோடு மட்டும் இக்காலத்தைத் தொடர்பு படுத்திப் பார்ப்பது இந்த உணர்வுக்குக் காரணமாக இருக்கலாம்.

ஆகவே,சோகத்தில் ஆழ்த்துகின்ற காலமாக தவக்காலத்தைப் பற்றி நினைக்கிறவர்களுக்கு இது ஒரு தேவையற்ற காலமாகப் பயப்பட வைக்கும்.இந்தக் காலம் நம்மில் ஏற்படுத்தக் கூடிய மாற்றத்தையும் இது தரும் பலனையும் புரிந்து கொள்ளாதவர்கள்,”தந்தையே, உமக்கு விருப்பமிருந்தால், இந்தத் தவக்காலத்தை அகற்றியருளும்” என்று மன்றாடத் தோன்றும்.

நம் வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாக எல்லா நேரமும் இல்லை.குடும்பத்திற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே தினமும் சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடப்பதாகத் தானே இருக்கிறது! வெளி வேலையையும் வீட்டு வேலையையும் கருத்தாய் செய்து முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.

எதிர்பாராத துயரங்கள் சுனாமியாக பொங்கி எழும் போது, ஏன் பிறந்தோம்? எதற்காக இவ்வாறு அல்லாடுகிறோம்? என்று புரியாமல்அன்றாடக் கவலைகள் நம்மை அடித்துச் செல்லும் போது,”இறைவா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?” என்று கேட்கத் தோன்றுகிறது.

இக்காலத்தை நாம் எந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்?எந்த நோக்கத்தோடு நாம் செயல்பட வேண்டும்?         முழுமை பெறாத உலகில் வாழ்வதினாலே, நாமும் வளர்ச்சிப் பரிணாமத்தின் நிறைவை அடையாதவர்களாக இருப்பதினாலே, துன்பம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

எல்லா மனிதர்களின் ஆழ்மனதிலிருந்தும் எழும் கேள்வி: “ஏன் இந்தத் துன்பம்?” இது ஒரு இருத்தலியல் (existential) தேடல். விளக்கம் சொல்ல முனைகின்ற எல்லா மதங்களும் தத்துவங்களும் அறிவுப் பூர்வமான பதிலைத் தரமுடியாமல் உருவகக் கதைகளிலும் குறியீடுகளிலும் (symbols) தஞ்சம் புக வேண்டியுள்ளது. துன்பத்தை ஒதுக்க முடியா விட்டாலும் விரக்தியில் ஒதுங்கிவிடாமல் வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டு பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இயற்றப்பட்ட இலக்கியங்கள்தாம் ஆதாம் ஏவாள் கதையும் யோபு இலக்கியமும். பதில் சொல்ல முடியவில்லை என்பதனால்தான் விதி,தலையெழுத்து,முற்பிறவி, இறைவனின் சித்தம் என்றெல்லாம் முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

 வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஓர் அம்சமான துன்பத்தைஏற்றுக் கொள்ளாவிட்டால் இன்னும் கடினமாக இருக்கும். நாம் அனுபவிக்கின்ற துன்பத்திற்குக் காரணம் தெரிந்தால் நாம் ஏற்றுக் கொள்வதற்கு கொஞ்சம் ஏதுவாக இருக்கிறது. நம்முடைய சொந்த முடிவுகளினால், செயல்களினால் நாம் துன்புறுகிறோம் என்று உணர்ந்தால் பரவாயில்லை. நமது துன்பத்துக்கு பிறருடைய சுயநலம், அல்லது ஏற்றத்தாழ்வுகளை நியாயப் படுத்தும் சமுதாயக் கட்டமைப்பு தான் காரணம் என்று கண்டுபிடித்தால் அது அநீதி என்று அங்கலாய்க்கிறோம்.காரணமும் தெரியாமல் மாற்றவும் முடியாவிட்டால்,நமது நன்மைக்காக அல்லது பாவங்களுக்குப் பரிகாரமாகத் துன்பத்தைத் தருகிறார் என்று இறைவனைக் காரணம் காட்டுகிறோம்.

எல்லாத் துன்பங்களும் இறைவனிடமிருந்தா வருகின்றன? இறைவன் கோபக்காரர் தண்டனை கொடுப்பதற்குத் துடித்துக் கொண்டிருப்பவர் என்று அநேக கிறித்தவர்கள் நம்புவது சரியா? நமது துன்பதுயரத்தால் மட்டுமே இறைவனுடைய கடின இதயத்தை இளக வைக்க முடியும், வேதனைப் படாமல் இறைவனின் கோபத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது என்று நினைப்பது இறைவனின் இயல்புக்கு மாறான சிந்தனை. இரக்கமே அவரது பெயர் என்று நமது திருத்தந்தை அறிவித்திருப்பதற்கு எதிரான நம்பிக்கைகள், நற்செய்தி வெளிப்படுத்தும் அன்புநிறை இறைவனின் முகத்தைச் சிதைப்பதாகவே இருக்கின்றன.     

தவிர்க்க முடியாத துன்பத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. யேசுவும் இவ்வாறு தான் பாடுகளை ஏற்றுக் கொண்டார் என்று நம்பி,பிறர் நலனுக்காக உழைக்கின்ற போது வருகின்ற கஷ்டங்களை ஏற்று, தொடர்ந்து மன உறுதியோடு செயல்பட்டால் இவ்வுலகம் உய்வடையும். தவக்காலம் அர்த்தமுள்ளதாக அமையும். நாம் உயிர்க்க வேண்டும் என்று உயிர் நீத்த யேசுவினுடைய வாழ்வின் பலன் நமக்குக் கிடைக்கும்.

யேசு மலைப்பொழிவில் போற்றும் பேறு பெற்றவர்களாக வாழ முயற்சித்தால் துன்பம் நாம் எங்கிருந்தாலும் நம்மைத் தேடி வரும். யேசுவைப் போல நாமும் பிறரை அன்பு செய்து, அவர்களுடைய நலன்களுக்காக அர்ப்பண வாழ்வு வாழ்கிற போது வருகிற துன்பத்தினால் நல்ல பலனும் உண்டு. அப்படிப்பட்ட துன்பம் நம்மைத் தூய்மைப் படுத்தும். நம் குறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து உயர்ந்த மனிதர்களாக நாம்உயர்வதற்கு உதவி செய்யும்.

ஆகவே, பொதுவாக, வாழ்வில் வருகின்ற துன்பமும், குறிப்பாக இந்தத் தவக்காலமும்,யேசுவின் மதிப்பீடுகளுக்காக வாழ்கின்றவர்களாக,மனித நேயமுள்ளவர்களாக நம்மை மாற்ற வேண்டும்.மனம் திருந்திய ஊதாரிப் பிள்ளையாக இறைத் தந்தையிடம் நம்மை உந்தித்தள்ள வேண்டும்.நாம் மேற்கொள்ளும் செபம்,நோன்பு,ஈகை போன்ற தவமுயற்சிகள், மாண்பிழந்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் மக்களின் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறுவதற்கு உதவ வேண்டும்.இது நிறைவேறும் என்று நம்பினால், அதற்காக முயற்சித்தால், இந்தத் தவக்காலம் ஓர் இனிய காலமாகத் தோன்றும்!இறை மணமகன் நம்மோடு இருக்கிற மகிழ்ச்சியும் தெம்பும் நம்மை ஊக்குவிக்கும்! அளவிட முடியாத யேசுவின் அன்பை அனுபவிக்கின்ற காலமாக அமையும்!பிரசவ வேதனையை மறந்து பிள்ளையை அரவணைத்துக் கொஞ்சும் பெற்ற தாயின் ஆனந்தம்நம்மை நிறைக்கும்!

இனிய தவக்கால வாழ்த்துக்கள்

 

அருட்தந்தை எம்மா, சே.ச.

இயக்குநர் JESCCO

(Jesuit Center for Counseling)

COMMENTS

Share On

More Articles

இருள் வாழ்வு ஒளியாகும்..

அடியேன் 2000-ம் ஆண்டில் இயேசுவின் மீட்புப் பணியில் பங்குபெற்ற இஸ்ராயேல் நாட்டிலுள்ள புனித இடங்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். இயேசுவின் வாழ்வில் பங்குபெற்ற பரிசுத்த இடங்கள் என்னையும் பரிசுத்தப்படுத்தியது.

இயேசு சிலுவையில் மரித்த கல்வாரிமலையில் இ…

யோபு ஆகமம் - புதிய ப..

அடியேன் வேதாகமத்தைப் பலமுறை வாசித்திருக்கிறேன். இறைவார்த்தைகளைத் தியானித்து ஜெபித்…

ஒப்பற்ற புனிதரே புனி..

எனக்கு மிகவும் அறிமுகமான ஒரு குருவானவர் அசாமிலே இறைப்பணியும், கல்விப் பணியும் செய்…

அர்ப்பணவாழ்வு! இன்னு..

அர்ப்பணவாழ்வு! இன்னும் முடியவில்லையா? "இரக்கத்தின் கதவுகளை வெவ்வேறு கோவில்களில் தி…

அருள்பணியாளர் லூயி ல..

அருள்பணியாளர் லூயி லெவேயை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியது இல்லை. நம்மில் பலர் …

New Published Books