மக்களின் அரசியலில் துறவிகளின் பங்கேற்பும், பங்களிப்பும் Share On
ECOLOGICAL CATEGORY ARTICLE |

அரசியல் என்றாலே கட்சி அரசியல் தான் அரசியல் என்ற பொதுவான புரிதல் மக்களிடையே இருப்பதால் அது ஒரு சாக்கடை என்று ஒதுக்கும் நிலை உள்ளது. “மக்கள் நலனை மையப்படுத்திய செயல்பாடே அரசியல்” என்ற பெர்னாட்சாவின் கூற்றோ அல்லது “தங்களின் வருங்கால வாழ்விற்கான வழிகளையும் வாழ்வின் வலிமைக்கான செயல்திட்டங்களையும் சட்டங்களையும் ஆராய்ந்தறிந்து நடைமுறைப்படுத்த முடிவெடுக்கும் சக்தியே அரசியல்” என்ற கார்ல் மார்க்கசின் கூற்றோ நமது நினைவுக்கு வராது. அரசியல் என்பது ஒரு குறிப்பிட்ட மனிதருக்கு அல்லது குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டும் என்று கூறி ஒதுங்கிக் கொள்வது தவறானது. ஒவ்வொரு மாந்தருக்குள்ளும் ஒரு அரசியல் உள்ளது. அரசியல் இல்லாமல் மனிதன் இல்லை. ஆனால் அந்த அரசியல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்பதுதான் கேள்வியாகும். அண்ணல் காந்தி கூறுவது போல் “சத்தியத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டும் இடம் தான் அரசியல், பாமர மக்களின் ஆதங்கங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் ஆவேசங்களின் வெளிப்பாடே அரசியல்” ஆகும்.

துறவு என்பது எல்லாவற்றையும் துறந்து வாழ்வதாகும் என்று புரிந்துகொள்ளப்படுகிறது. கி.பி 4 ஆம் 5 ஆம் நூற்றாண்டில் துறவற வாழ்வு தொடங்கியபொழுதே சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்வது, ஒறுத்தல் முயற்சி செய்வது, தன்னை வறுத்தி வாழ்வது, கடுமையான ஒழுங்குமுறைச் சட்டங்களோடு வாழ்வது போன்ற அடிப்படைகள் கட்டியமைக்கப்பட்டன. எனவே, துறவிகள் சமூகம், அரசியல், பண்பாடு போன்றவைகளிலிருந்து ஒதுங்கி அறைக்குள் அடைப்பட்ட ஆன்மீக வாழ்வு சிறந்தது என்று எண்ணி வாழத் தொடங்கினார்கள். காலப்போக்கில் மக்களின் ஒருசில தேவைகளை நிவர்த்தி செய்ய சமூக சேவைகள் செய்யத் தொடங்கினார்கள். இந்தியாவைப் பொறுத்தளவில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு மறைப்பணியாளர்களால் கல்வி, மருத்துவம் போன்ற சமூக சேவைகள் செய்ய பல துறவற சபைகள் உருவாக்கப்பட்டன.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் உலகளவில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. காலனியாதிக்கத்திலிருந்து பல நாடுகள் போராட்டங்கள் வழியாக விடுதலைப் பெற்றன. ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகள் கூர்மையாகின. உழைப்புச் சுரண்டலும் வறுமையும் வறட்சியும் மக்களை வாட்டி வதைத்தன. அதே நேரத்தில் பொதுவுடைமைக் கொள்கை உலகளவில் மக்களிடையே பெரும் எழுச்சியையும் அதிர்வுகளையும் போராட்ட உணர்வையும் ஊட்டி வளர்த்தன. இதன் விளைவாக பல நாடுகளில் முதலாளிகளுக்கு எதிராகவும் நாட்டை ஆண்டவர்களுக்கு எதிராகவும் கலகங்களும் உரிமைக்கான போராட்டங்களும் வெடித்தன. இச்சூழலில் திருஅவையின் கதவுகளை திறந்து வைப்போம் புதிய காற்று உள்ளே வரட்டும் என்று கூறி திருத்தந்தை 23 ஆம் யோவான் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை கூட்டினார்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் சமூக மாற்றத்திற்கு ஏற்றார் போல் பல புதிய கருத்துக்களை வெளிப்படுத்தியது. திரு அவையை பற்றி புதிய விளக்கம் கொடுத்த சங்கம் பொதுநிலையினருக்கு முன்னுரிமையும் முதன்மைத்துவமும் கொடுத்தது. “காலத்தின் குறிகளைத் துளாவி அறிந்து, நற்செய்தியின் ஒளியில் அவற்றின் பொருளை எல்லாக் காலக்கட்டங்களிலும் விளக்கி உரைப்பது திருஅவையின் கடமையாகும்”(இ.உ.தி.4) என்று கூறியது மட்டுமல்ல “ உண்மையான மனிதத் தன்மை வாய்ந்த அரசியல் வாழ்வைநிலைநாட்ட வேண்டுமென்றால் நீதி, அன்பு மற்றும் பொது நல ஈடுபாடு பற்றிய உள்ளுணர்வை வளர்க்க வேண்டும்” (இ.உ.தி.73) என்று சங்கம் அழைப்பு விடுத்தது. மேலும் “ நாம் வாழும் இக்கால்த்தில் சிக்கல் மிகுந்த சூழமைவுகள் நிலவுகின்றன. இதன் காரணமாக ஆட்சித்துறை சமூக, பொருளாதார, பண்பாட்டு காரியங்களில் அதிகமாகத் தலையிட வேண்டியுள்ளது” என்று சங்கம் கூறுகிறது.

இப்பின்னனியில் லத்தின் அமெரிக்காவில் தோன்றிய விடுதலை இறையியல் திரு அவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, நற்செய்திப் பணியில் மாற்றத்தைக் கொணர்ந்தது, மக்கள் மையசெயல்பாடுகளை முன்னெடுக்கச் செய்தது, ஏழை எளிய மக்களுக்கு முன்னுரிமை என்ற கருத்தை வளர்த்தெடுத்தது.மேற்குறிப்பிட்ட பின்னனியில் சூழலில் 1980 க்குப் பிறகு தமிழக திரு அவையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. மக்கள் நலனை மையப்படுத்திய அமைப்புகள் உருவாகின. ஏழை எளிய மக்களின் முன்னெற்றத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் பல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இப்பணிகளில் துறவிகள் நேரடியாக பங்கெடுக்கத் தொடங்கினர். 1985 களில் விடுதலை இறையியலை அடிப்படையாகக் கொண்டு மறைமாவட்ட குருக்கள் மக்களின் சமூக அரசியல் பொருளாதார செயல்பாடுகளில் ஈடுபடத்தொடங்கினர். அநீதச் செயல்பாடுகளை, ஏற்றத்தாழ்வுகளை, ஓடுக்குமுறைகளை, சுரண்டல்களை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி போராடத் தொடங்கினர். மக்களுக்காக இயக்கங்களை கட்டியெழுப்பி இயக்க அரசியலில் மறைமாவட்ட குருக்கள் ஈடுபடத் தொடங்கினர். இக்காலக்கட்டத்தில ;தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பல இயக்கங்கள் உருவாகின. அவைகளிலும் பெண் துறவிகள் ஈடுபட்டனர்.

இப்பின்னனியில் தான் 13 டிசம்பர் 1989 ல் சிவகங்கை, மதுரை மறைமாவட்ட பணியாளர்களால் ‘உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம்’ உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் ‘சமூக விடுதலைப் பணியே இறையரசுப் பணி’ என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமூக இயக்கமாக உருவாக்கப்பட்டது. உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் தொழிலையும் பாதுகாக்கவும் மக்களின் உரிமையை நிலைநாட்டவும் இந்த இயக்கம் பல அரசியல் செயல்பாடுகளையும் அமைப்புச்செயல்பாடுகளையும் முன்னெடுத்தது. இந்த இயக்கத்தில் நிறைய பெண் துறவிகள் ஈடுபடத் தொடங்கினர். இந்த இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்து மக்களின் சமூக பொருளாதார அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த இயக்கப் பணியில் ஈடுபடுகின்ற போது பல தியாகங்கள் செய்ய வேண்டியுள்ளன. பல எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சவால்களையும் சந்திக்க நேரிடுகிறது. இருப்பினும் மக்களுக்காக வீதியில் போராடுகின்ற பொழுது, அரசு அடக்குமுறைகளுக்கும் காவல் துறையின் தடியடிகளுக்கும் பலியாவதோடு சிறைக்கும் செல்ல நேரிட்டுள்ளது. எங்கள் இயக்கத்திலிருந்து அருட்பணியாளர்களும் பெண் துறவிகளும் மக்கள் உரிமைக்காக போராடி சிறைக்கு சென்றிருக்கிறார்கள். நீதிக்காக, அடிப்படைத் தேவைகளுக்காக போராடி வெற்றி கிடைக்கும் போது அழைத்தலின் நோக்கமும், மானுட வளர்ச்சிக்காக செய்த தியாகங்களும் நிறைவு தருகின்றது. இவைகளை எண்ணுகின்றபோது ‘நீதிக்காக திருமுழுக்கு யோவானின் தலை வெட்டப்பட்ட நிகழ்வும்’; ‘மக்களின் விடுதலைக்காக இயேசு சிலுவையில் அறையப்பட்டதும்’ எனக்கு நினைவுப்படுத்தும். எனவே துறவிகள் ஒவ்வொருவரும் சமுகத்தோடு இனைந்து நீதிக்காகவும், விடுதலைக்காகவும் குரல் கொடுக்கின்றபோது இறையரசு இம்மண்ணில் மலரும், நாம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்கள் உருவாகும். அப்போதுதான் இயேசுவின் இறப்பும், யோவானின் அறைக்கூவலும் நிறைவாகும்.

 

சகோ. டெய்சி ராணி CIC

விரகனூர்,மதுரை

COMMENTS

Share On

More Articles

New Published Books