இயற்கையோடு இயல்பாக வாழிடம் தேடும் தண்ணீர் Share On
SOCIOLOGICAL CATEGORY ARTICLE |

காப்பீட்டு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் ஒரு தம்பதியிடம் தன் நிறுவனத்தின் மாதாந்திர  வாராந்திர தினசரி ஒரு மணி நேரக் காப்பீட்டுத் திட்டங்களை விளக்குகிறார். ‘ஒரு மணி நேரத்துக்குக் கூட காப்பீடு இருக்கிறதா?! ‘ என்று ஆச்சரியப்படும் குடும்பத்தலைவருக்கு விக்குகிறது. தண்ணீர் குடிக்காமல் சமாளித்துக்கொண்டே வாராந்திரத் திட்டத்துக்கான காப்பீட்டுத் தொகையைக் கேட்டதும் அதிர்ச்சியாகும் தம்பதி மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டு அதில் இணைகிறார்கள்.        காப்பீட்டுத் தொகையை வழங்கிவிட்டு ஒரு புட்டித் தண்ணீரை அந்த விற்பனைப் பிரதிநிதியிடம் அளிக்கிறார்கள். அவர் அத்தொட்டியில் அந்தக் குடும்பத்தின் பெயர் மற்றும் காப்பீட்டு எண் எழுதிய ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு தனது பெட்டியில் வைத்துப் பூட்டிக்கொள்கிறார். ஒரு வாரத்துக்கு தண்ணீரைப் பத்திரமாகப் பாதுகாக்கும் திட்டம் அது. வருங்காலத்துக்கு வேண்டிய தண்ணீரைச் சேமிப்பதில் பத்திரப்படுத்துவதில் நாம் எந்த அளவுக்குக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை Insurance  என்ற குறும்படம் சொல்லியிருக்கிறது. (https://www.youtube.com/watch?v=Mx6U5H3V8pg)

The Ritual  என்ற மற்றொரு குறும்படத்தில் வறட்சிக் காலத்தில் கடவுளுக்கு அபிஷேகம் செய்ய ஒரு செம்பு நீரை இருப்பு வைத்திருக்கிறார் ஒரு கோயில் பூசாரி. அபிஷேகம் செய்யப்போகும் கடைசி வினாடியில் மனம் மாறிää பட்டுப்போக இருக்கும் ஒரு செடிக்கு அந்தச் செம்பு நீரை ஊற்றுகிறார். தண்ணீரை எதற்குச் செலவழிக்க வேண்டும் என்பதை நறுக்கெனக் காட்சிப்படுத்தி இருந்தது அந்தப் படம். தண்ணீரை எப்படிச் சேமிக்க வேண்டும், தண்ணீர் பற்றாக்குறை எவ்வளவு பெரிதாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதைக் கற்பனை வடிவில் இக்குறும்படங்கள் வெளிப்படுத்தினாலும், இதுபோன்ற அபாயமான கற்பனைகளுக்கு மனித இனம் அப்பாற்பட்டதல்ல என்பதும் உண்மையே. தண்ணீருக்குக் காப்பீட்டுத் திட்டமா என்று வியந்து வாய்பிளக்க வேண்டிய அவசியமில்லை. தண்ணீர் இல்லாத டெட் வால்யூம் என்று அழைக்கப்படக்கூடிய (ஒரு நாட்டின் தண்ணீர் வளம் ஒட்டுமொத்த வளத்திலும் 10 சதவிகிதத்துக்கும் கீழ்; குறைவதை ‘டெட் வால்யூம்’ என அபாயகரமாகக் குறிப்பிடுவர்) நிலையை நோக்கி நாம் நகரத் தொடங்கி விட்டோம். எனவே கதை வடிவில் வந்துள்ள காப்பீட்டுத் திட்டம் எதார்த்தமாகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை எனலாம். 

இந்த அளவு மனித வாழ்க்கையின் அதி முக்கியமான ஓர் இயற்கை வளம் தண்ணீர். மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் வல்லமை கொண்ட அந்த ஆயுதம் எவ்வளவு இன்றியமையாதது என்று உணரவும் நன்னீரைச் சேமிப்பதும் நன்னீர் மேலாண்மையை உறுதி செய்து நன்னீர் வளங்களைப் பாதுகாப்பதுமே (To realize the importance of freshwater and advocate the sustainable management of freshwater resources)  உலக தண்ணீர் தினத்தின் இலக்காக நாம் அறிகிறோம்.          ஆனால் உலக தண்ணீர் தினத்தைக் கொண்டாடுவதன் நடைமுறை இதுதானா அல்லது இதன் இலக்கினை எதார்த்தமாக்குவது சாத்தியமானதாக இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே. இதற்கு மாபெரும் உதாரணமாக அமைந்தது 2015 டிசம்பர் சென்னைப் பெருவெள்ளம்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 30000 கன அடி தண்ணீரை வெளியேற்றியதால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்றும் இவ்வளவு தண்ணீரை சென்னை மாநகருக்குள்ளே பாய்ந்து செல்லும் அந்த ஆற்றினால் வெளியேற்ற முடியாது என்றும் சென்னைப் பெருவெள்ளத்திற்கு நாம் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம்.

30000 கனஅடி தண்ணீரை வெளியேற்றும் திறன் அடையாறு ஆற்றுக்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால் அந்த ஆற்றின் நீரோட்டம் செல்லும் பகுதியில் இவ்வளவு ஆக்கிரமிப்புகள் நடைபெறாதிருந்திருந்தால், நாம் கண்டது போல மழைத்தண்ணீர் பெருவெள்ளமாக உருவெடுத்திருக்க வாய்ப்புக்கள் இல்லை என்பதே அறிஞர்கள் முன்வைக்கும் வாதம்.            

அசுரத்தனமான சென்னையின் வளர்ச்சிக்கு காவு கொடுக்கப்பட்ட நன்னீர் ஆதாரங்கள் இல்லாமல் போனதே இப்பெரு வெள்ளத்திற்குக் காரணம். ஆறு மற்றும் ஆற்றின் கரைப்பகுதியில் மட்டும் 1.5 லட்சம் முறையற்ற கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 300 நன்னீர் நிலைகள் காணாமல் போயிருக்கின்றன. வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட முடிச்சூர் மற்றும் வேளச்சேரி போன்ற பகுதிகள் ஆற்றினகரைப்பகுதியிலோ அல்லது அதன் தண்ணீர் பிடிப்புப் பகுதியிலோ கட்டப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி பகுதிகள் அனைத்தும் ஆற்றின் தண்ணீர் பிடிப்புப் பகுதியை கான்கிரீட் தளங்களாக மாற்றிய பின் உருவானவை. சென்னையின் 5,550 ஹெக்டேர் சதுப்பு நிலப் பகுதிகள் தொழில்நுட்ப பூங்காக்களாக உருவெடுத்துள்ளன. வெறும் 10 சதவீத சதுப்பு நிலம் மட்டுமே பாதுகாக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வு முடிவுகள் எல்லாம் நமக்கு உணர்த்துவது ஒன்றே. சமீபத்திய பெருமழை இயற்கை வாழிடங்களுக்கு எதிரான அப்பட்டமான மனித சுயநலத்தையும் ராட்சசக் கரம் கொண்டு வளர்ச்சி என்ற பெயரில் அவற்றைச் சூறையாடும் மனித பேராசையையும் இனம் காட்டியிருக்கின்றன.சென்னைப் பெருவெள்ளத்தின் ஆய்வு முடிவுகளைக் கொண்டு நாம் வாழும் இடங்களில் உள்ள நன்னீர் நிலைகள் பற்றியும் அவை பாதுகாக்கப்படுவது பற்றியும் சற்றே சிந்திப்போம்.சிறு வயதில் உங்கள் ஊரில் நீங்கள் பார்த்த, விளையாடிய மீன்பிடித்த, படகு ஓட்டிய எத்தனை நன்னீர் நிலைகள் அல்லது குளங்கள் இன்று அப்படியே இருக்கின்றன? வளர்ச்சி என்றதும் நிலங்கள் மறைவதை விட குளங்கள் மறைந்து விடுவதே எதார்த்தமாக இருக்கும் சூழ்நிலையில் உலக தண்ணீர் தினத்தைக் கொண்டாடும் நமக்கு எப்படிப்பட்ட மனநிலை வேண்டும்?

தன்னீரைப் பாதுகாப்பதும், சிக்கனமாகச் செலவழிப்பதும், தண்ணீர் மேலாண்மையைக் கடைப்பிடிப்பதும் இன்றியமையாததே. அதே வேளையில் நன்னீரைப் பாதுகாக்கும் வாழிடங்களான குளங்களையும் பாதுகாப்பது நம் கடமை அல்லவா? தண்ணீர் சிக்கனம் எளிது. ஆனால் அதன் வாழிடங்களான குளங்கள் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாப்பதற்கு வளர்ச்சி என்ற மாயையும், தண்ணீரின் வாழிடத்தை நம் வாழிடமாக்கும் மனிதப் பேராசையையும் விட்டு வெளியே வர வேண்டும்.

இந்தியாவின் ஒரு பாதி தண்ணீராலும் மறுபாதி வறட்சியாலும் அழியும் எதார்த்தத்தை இனியாவது மாற்றி எழுத வேண்டும். ஒருவேளை சென்னைப் பெருமழைத் தண்ணீர் அதன் வாழிடங்களிலும் குளங்களிலும் முறையாகசேமிக்கப்பட்டிருந்தால்…? சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் அல்லவா தீர்க்கப்பட்டிருக்கும்?நமது வாழிடங்களை எடுத்துக் கொள்வோம்? நம் பகுதியில் உள்ள நீர் நிலைகள் எப்படிப்பராமரிக்கப்படுகின்றன? அதில் ஆக்கிரமிப்புகள் வந்துவிட்டனவா? அவை குளங்களாகவே அல்லது நீர் நிலைகளாகவே இருக்கின்றனவா? அப்படிப்பட்ட நீர் நிலைகளில் தொழிற்சாலைக் கழிவுகள் ஏதும் கலக்கப்படுகின்றனவா? மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் நீர் ஆதாரமான வைகை ஆறு மக்களின் தாகம் தீர்க்கும் நன்னீர் ஆதாரமாகத் திகழ்கிறதா? கொடைக்கானல் பாதரசத் தொழிற்சாலையின் நச்சுக்கள் வைகை ஆற்றில் கலப்பதை நாம் அறிவோமா? திண்டுக்கல் மாநகரின் நன்னீர் ஆதாரங்கள் அனைத்தும் தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் பாதிக்கப்பட்டு, அவையனைத்தும் நோய்க்கிருமிகளைப் பரப்பும் சாக்கடையாக மாறிவிட்டதை நாம் அறிவோமா? நிலையான, முறையான குடிநீர் ஆதாரத்துக்காகத் தத்தளித்துக் கொண்டிருக்கும் விருதுநகர் மாவட்டத்தின் தண்ணீர் தேவைகளை நாம் அறிவோமா? தண்ணீர்ச் சிக்கனம் மட்டும் உலக தண்ணீர் தினத்தைக் கொண்டாடும் சிறந்த வழியாகிவிட முடியாது. நம்மைச் சுற்றியுள்ள மக்களின் தண்ணீர் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு நம்மிடம் இருக்கும் வழிகள் என்னென்ன என்று சிந்தித்து அவற்றை செயல்படுத்துவதும் அவசியமானது.

இன்றைய தேவை நன்னீர் ஆதாரங்களை உருவாக்குவதே. நீர் நிலைகளை உருவாக்குதல் என்பதை விட ஏற்கெனவே நீர் நிலைகளாக உள்ளவை அனைத்தும் தூர்வாரப்படுவதும், மழைக்காலத்தில் உபரியாக வீணாகும் மழைநீரைச் சேகரித்துத் தக்க வைப்பதுமேயாகும். நீர்நிலைகளை நாம் தக்கவைக்க வில்லையெனில் என்றாவது ஒரு நாள் தண்ணீர் தன் இடம் தேடி சென்னையை மூழ்கடித்தது போல நம்மையும் அதிர்ச்சிக்குட்படுத்தும்.          தண்ணீரைச் சேமிப்போம். தண்ணீரைச் சேமிக்கும் நீர் நிலைகளைக் காப்போம். தன் வாழிடம் தேடிப் பயணிக்கும் தண்ணீருக்கு நாம் செய்யும் பேருதவியும், மானுடக்கடமையும் அதுவே. இயற்கை வழங்கும் பெருங்கொடையான தண்ணீரின் வாழிடத்தை உறுதி செய்தால் அது நம் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் என்ற உண்மை உணர்வோம்.

அருட்பணி. தினகரன்

மூஞ்சிக்கல்

COMMENTS

Share On

More Articles

இன / மத அழிப்பு முயற்சியில் பலிகடா ஆக்கப்பட்டது ..

ஆசிஃபா எனும் பெயர் கொண்ட 8 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள கதி கொடுமையானது; அதன் பின்னணியிலான அரசியல் அதைவிடக் கொடுமையானது. இதனை விளக்கக் கோரி பொது மக்களிடம் நியாயம் வேண்டுவதுதான் இந்த துண்டுப் பிரசுரத்தின் நோக்கம்.

நிகழ்வு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவ…

கல்வி எனும் ஒரு சக்த..

இம்மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகளின் சிறப்புக் காலம். மாணவ மாணவியர் எந்தப் பள்ளி, எ…

புற்றுநோய்க் களமா தம..

இயற்கை தவறாகப் பயன்படுத்தப்படும் போதெல்லாம் அது ஒரு பேராபத்தாக வெடிக்கிறது. நாம் க…

Non-Violence: A Styl..

Non-Violence: A Style of  Politics for Peace. This is  the title of the …

New Published Books